Header Ads

test

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான தீர்வு கோரி தொடரும் போராட்டம்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் ஒரணியில் திரண்டு முன்வைக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வட கிழக்கில் 8 மாவட்டங்களிலும், தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுமாறு வலியுறுத்தி கடந்த 5 ம் திகதி முதல் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இறுதி நாளான இன்று (11.01.2023) காலை 10 மணிக்கு நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டிருந்தனர்.

இதன்போது வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தையில் சிறுபான்மை தமிழ் அரசியல்கட்சிகள் ஓரணியில் திரண்டு, ஒரே குரலில் ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்.

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதில் பெண்கள் 50 வீதம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

தற்போது வடகிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983 களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் மத கலாச்சார இடங்கள் தொல்பொருள் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உடன் நிறுத்தல் வேண்டும்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இன்று கோவிட் தொற்றை விட பொருளாதாரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாங்கள் தெரிவு செய்து நாடாளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு அனுப்பிய அரசியல்வாதிகள் எங்கள் மக்களைப் பற்றி ஒரு நாளும் சிந்திப்பதில்லை.

அவர்கள் சிந்தித்திருந்தால் நாங்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்களுடன் கோஷம் எழுப்பியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.




No comments