Header Ads

test

பிரபாகரனின் இறுதி தருணம் குறித்து முன்னாள் நோர்வே இராஜதந்திரி வெளியிட்ட தகவல்.

பிரபாகரனின் இறுதித் தருணம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முன்னாள் நோர்வே இராஜதந்திரியும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் ஊடகம் ஒன்றில் பதிலளித்துள்ளார்.

கேள்வி : பிரபாகரனின் இறுதி தருணம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

பதில்: அதற்கு என்னிடம் பதில் இல்லை. என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழர் தரப்பு அல்லது இலங்கை இராணுவம் முன் வந்து உண்மையை சொல்ல வேண்டும்.

கேள்வி : ஆனால் விடுதலைப் புலிகள் உங்களைத் தொடர்பு கொண்டதாக நீங்கள் சொன்னீர்கள்?

பதில்: அவர்கள் எங்களை அணுகியிருந்தனர், ஆம். ஆனால் பிரபாகரன் பற்றிய எந்த தகவலும் எங்களிடம் இல்லை. போரின் கடைசி சில மாதங்களில் புலிதேவன் மற்றும் நடேசன், அவர்களுடன் தொடர்பு கொண்டோம் அவர்களுடாகவே பிரபாகரனுடன் தொடர்புகொள்ளப்பட்டது.

கேபி (புலிகளின் தலைவர் குமரன் பத்மநாதன்) சிங்கப்பூரில் உள்ள விடுதலைப் புலிகளின் வெளியுறவுக் கொள்கைப் பேச்சாளராக இருந்ததால், அவரை ஒஸ்லோவுக்கு அழைத்தோம். கேபி வர ஒப்புக்கொண்டார், அவர் [பிரபாகரனை] சிங்கப்பூரில் இருந்து நோர்வேக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.

ஆனால் பிரபாகரனின் உத்தரவின் பேரில் அந்த சந்திப்பு கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டது. எனவே பல உயிர்களைக் காப்பாற்றக்கூடியதாக , போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்ய பிரபாகரன் தொடர்ந்து மறுத்துவிட்டார்.

கேள்வி; 2009 மே 17 அன்று விடுதலைப் புலிகள் உங்களைத் தொடர்பு கொண்டதாக நீங்கள் சொன்னீர்கள். அன்றைய தினம் நிலைமைஎவ் வாறு இருந்தது? பிரபாகரன் எங்கே இருந்தார்?

பதில்; 2009 மே 17 க்கு முன்னர், போருக்கு ஒரு ட முடிவைக் கண்டறிவதற்கான ஒழுங்கை மேற்கொள்வதே எங்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருந்தது. விடுதலைப் புலிகள் தோற்றுப்போவார்கள் என்பது மிகத் தெளிவாக இருந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ், சிங்கள மக்களின் உயிரைக் காப்பாற்ற நினைத்தோம்.

ஐ. நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இந்திய அல்லது அமெரிக்க கப்பல்கள், ஐ.நா. கொடியை பறக்கவிட்டு, போர் வலயத்தில் இருந்து பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர்களை வெளியேற்றும் என்பது ஒப்பந்தம்.

சரணடைந்தவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்யப்படும். இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் [இறுதியில்] அவர்கள் செய்யவில்லை. கடைசி வரை போராட விரும்பினார்கள்.

கேள்வி; விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் தனி ஈழம் இருந்திருக்குமா?

பதில்; தனி ஈழம் இருந்திருக்காது, ஆனால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருந்திருப்பார்கள். ஒரு சமஷ்டி கட்டமைப்பு இருந்திருக்க கூடும்.

கேள்வி; பிரபாகரன் எப்படிப்பட்டவர்?

பதில்: அவர் ஒரு கவர்ச்சியான ஆள் அல்ல. மொழித் தடை இருந்தது; எங்களால் அவருடன் அவரது மொழியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் ஒரு தொலைநோக்கு தலைவர் என்பதை விட ஒரு இராணுவ மனிதராக இருந்தார்.

2001 இல் யாழ் குடாநாட்டை இழந்தாலும் சரி அல்லது பண்டாரநாயக்க விமான நிலையத்தை அழித்தாலும் சரி, நிச்சயமாக ராஜீவ் காந்தி, லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் பலரின் படுகொலைகள் இராணுவக் கண்ணோட்டத்தில் இருந்து வந்தவை. விடுதலைப் புலிகள் கடற்படை மற்றும் விமானப் படையுடனான உலகின் முதலாவது கிளர்ச்சிக் குழுவாகும்.

அவரது வாழ்க்கையின் பிற்பகுதி வரை, அவர் முற்றிலும் புத்திசாலித்தனமான இராணுவத் தலைவராக இருந்தார் என்று என்னால் சொல்ல முடியும். இருப்பினும், அவரது அரசியல் பார்வை அவரது இராணுவ புத்திசாலித்தனத்துடன் ஒத்துப்போகவில்லை. அவர் இந்தியாவை நன்கு புரிந்து கொள்ளவில்லை; அவர் உலகின் ஏனைய பகுதிகளைப் பற்றி புரிந்து கொள்ளவில்லை.

இந்தியாவை நன்றாகப் புரிந்துகொண்டிருந்தால், ராஜீவ் காந்தியைக் கொன்ற தவறை இழைத்திருக்கமாட்டார். இந்த விடயங்கள் அனைத்திலும் அன் டன் பாலசிங்கம் [பத்திரிகையாளர் மற்றும் மூலோபாயவாதி] சொல்வதை அவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் பாலசிங்கம் இறந்த பிறகு [2006 இல்], புலிகள் தளத்தை இழக்கத் தொடங்கினர். பிரபாகரன் சகல பிரச்சினைக்கும் இராணுவத் தீர்வு உண்டு என்று நம்பினார் என்று நினைக்கிறேன்.

கேள்வி; சமாதான நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கியதாக நீங்கள் கூறுகிறீர்களா?

பதில்; கடந்த சில மாதங்களைத் தவிர, இலங்கையில் இந்தியா எப்போதும் சமாதானதிற்காகவே இருந்தது. ராஜீவ் காந்தி (கொலை) காரணமாக இந்தியா விடுதலைப் புலிகள் மீது சந்தேகம் கொண்டிருந்தது. ஆனால் இந்தியா தொடர்ந்துசமாதானப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வந்தது.

பின்னர் 2008க்குப் பிறகு இந்தியாவின் மனநிலை மாறியது. இலங்கை அரசு போரில் வெற்றிபெற முடியும் என்று [இந்தியா] நினைத்தது அதுவே முதல் முறையாகும்.. அதன் பின்னரே இந்தியா அவர்களுக்கு அனைத்து உளவுத்துறை ஆதரவையும் வழங்கியது.

கேள்வி; ஆனால் இந்தியா எப்போதும்சமாதானத்துக்காக நின்றது என்று சொன்னீர்களே ?

பதில்; அதற்குக் காரணம் புலிகள் முன்பு கொடுத்த வாக்குறுதியை [போர் நிறுத்தத்தில்] காப்பாற்றவில்லை. 2008க்குப் பிறகு இந்தியா பிரபாகரனை நம்பவில்லை.

கேள்வி; யுத்தம் இன அழிப்பு அல்லது இனப்படுகொலை சம்பந்தப்பட்டது என்று கூறுகிறீர்களா?

பதில்; நான் பொதுவாக அந்த வார்த்தையை பயன்படுத்துவதில்லை. ஆனால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நிச்சயமாக நடந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் நிறுவனங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. அது மிக மிக மோசமாக இருந்தது, அது போர்க் குற்றமாகத் தகுதி பெறக்கூடும்.

கேள்வி; புலம்பெயர் மக்கள் எப்பொழுதும் ஈழத்துக்காக இருப்பதால் புலிகள் மீண்டும் ஒருங்கிணைக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்; நான் அப்படி நினைக்கவில்லை. இலங்கையில் ஆயுதப் போராட்டத்திற்கான ஆர்வம் குறைந்துவிட்டது. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் காந்திய வழி முறைகளின் அடிப்படையில் மிகவும் வலுவான விதத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி ; ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்படவில்லை. இதனை நியாயப்படுத்த முடியுமா?

பதில்; புலிகள் தற்போது இல்லை, எனவே தடை என்பது எனது பார்வையில் குறிப்பிடத்தக்கது அல்ல. இலங்கையில் தமிழர் உரிமைகளை நிலைநாட்ட விரும்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்பதே இப்போது முக்கியமானது. தலைமை இலங்கையில் இருந்தே வரவேண்டும்.

கேள்வி; இலங்கையின் தற்போதைய ஆட்சிமுறை மற்றும் மாகாண சபைகளை உருவாக்கி தமிழை அரச கரும மொழியாக்கிய 13வது திருத்தச் சட்டத்தின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்; 13வது திருத்தம் ஒரு தீர்வாக இந்தியாவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது . அதை பிரதமர் நரேந்திர மோடி காண்பித்துள்ளார்.. வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவில் உள்ளஏனைய தலைவர்களும் இலங்கையை அமு ல்படுத்துமாறுஇலங்கையிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். நான் அவர்களுடன் உடன்படுகிறேன்.

இலங்கைத் தமிழர்கள் தங்கள் அரசியல் வெளியை விரிவுபடுத்தவும், சமாதானம் நிலைத்திருப்பதை உறுதி செய்யவும், அதிகாரப் பகிர்வுக்கு உதவவும் போராட வேண்டும். எனவே, தமிழர்களுக்கு எனது அறிவுரையானது ஒற்றுமையை பேண வேண்டுமென்பதாகும்.. மேலும் அவர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் பொதுவான களத்தை கண்டறிய வேண்டும்.

உண்மையில், இலங்கையில் தமிழர்களுக்கான இடம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. அந்த வெளியை விரிவுபடுத்துவதற்கான தமிழர்களின் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும்.

கேள்வி; இலங்கையில் சீன முதலீடுகள் குறித்து இந்தியாவில் கவலை அதிகரித்து வருகிறது. தெற்காசியாவில் புவிசார் அரசியல் மாற்றம் நிகழும் என்று நினைக்கிறீர்களா?


பதில் ; நாம் இலங்கையில் செயற்பட்ட போது, சீனா அங்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைகொண்டிருக்கவில்லை. நாங்கள் அனைவரும் இந்தியாமீதும் , ஓரளவுக்கு அமெரிக்காமீதும் கவனம் செலுத்தினோம். அப்போது சீனாம் பெரிய முதலீடுகளை கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்போது அது ஒரு கடினமான சூழ்நிலையாக இருக்கலாம். சீனா உலகில் எல்லா இடங்களிலும் முதலீடு செய்கிறது,

மேலும் பெரும்பாலான நாடுகள் இந்த முதலீடுகளால் பயனடைகின்றன. எனவே, அந்த வகையில் இலங்கை ஒரு தனியானவிடயமாக இல்லை.. சீனா இந்தியாவிலும் முதலீடு செய்துள்ளது, ஆனால் அதன் ஒரேமண்டலம் , ஒரேபாதை முன்முயற்சியின் ஓரங்கமாக இல்லை.

கேள்வி; ஆனால் எனது கேள்வி விசேடமானது அதாவது இது பிராந்தியத்தின் புவிசார் அரசியலை மாற்றுகிறதா?

பதில்; இதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிலிருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்.

கேள்வி; இப்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருப்பதால், நோர்வேக்கும் இலங்கைக்கும் எவ்வாறான உறவு உள்ளது?

பதில்; இலங்கையுடன் எமக்கு இயல்பான உறவு உள்ளது. எங்களிடம் ஒரு தூதரகம் உள்ளது, வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளன. ஆனால் சமாதான முன்னெடுப்புகளின் போது இருந்தது போன்ற விசேடமான உறவுகள் எதுவும் இல்லை. உயர்மட்ட தலைவர்களுடன் எங்களுக்கு நெருக்கமான உறவு இல்லை.

கேள்வி; நீங்கள் சமீபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தீர்கள் . புலிகள் விவகாரம் பற்றி கலந்துரையாடினீர்களா?

பதில்; நாங்கள் இலங்கை பற்றி பேசவில்லை. கொரோனா மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி மட்டுமே பேசினோம்.



No comments