Header Ads

test

இலங்கை அரசாங்கம் மீது முஸ்லீம்கள் கடுமையான வெறுப்புடன் இருப்பதாக ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.

 கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இந்த ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்படைந்துள்ளார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்திற்கு தாரைவார்ப்பதற்கு விரும்பவில்லை என்றும் அந்த நான்கு உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ‘கூஜா’ தூக்கும் செயற்பாடுகளை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தமிழ் ஊடகமொன்றில் மெய்நிகர் ஊடாக வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

அரசாங்கத்தின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன் பின்னர் அது தொடர்பில் பல்வேறு பேச்சுக்களை கட்சிக்குள் நடத்தியிருந்தோம்.

கட்சியின் தலைமையினதும், உயர்பீடத்தினதும் மற்றும் போராளிகளினதும் தீர்மானத்திற்கு மாறாக செயற்படக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியிருந்தோம். அதற்கு அந்த உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது கட்சிக்குள் பிளவுகள் என்ற அபிப்பிராயம் ஆதரவாளர்களுக்கும், மக்களுக்கும் சென்று குழம்பங்களை ஏற்படுத்தக் கூடாது.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்புக்களின் போது வாக்களிப்பதற்கு இணக்கமில்லாது விட்டால் ஆகக்குறைந்தது அதிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறு அவர்களை வலியுறுத்தியிருந்தோம். அதற்கும் சம்மதம் வெளியிட்டனர்.

ஆனாலும் புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் நிதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.

இது தொடர்பில் அவர்கள் பதிலளிக்கையில், நிதி அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்படும் அபிவிருத்தி நிதிகள் தமக்கு கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தில்தான் ஆதரவாக வாக்களித்தோம் என தெரிவிக்கின்றனர்.

இந்த உறுப்பினர்கள் முதலில் அபிவிருத்தி என்ற மாயையில் இருந்து வெளிவர வேண்டும். கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இந்த ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்படைந்துள்ளார்கள்.

அவ்விதமாக இருக்கையில் ஆட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்குவதை எம்மவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் அவர்கள் அதற்குரிய விலையை நிச்சயம் கொடுக்க வேண்டி வரும்.

இந்த உறுப்பினர்களை அரசாங்கத்திற்கு தாரை வார்த்துவிடக்கூடாது என்பதற்காக நான் ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது கட்சியிலிருந்து அகற்றுதல் போன்ற கடுமையான தீர்மானங்களை இதுவரையில் எடுக்காது இருக்கின்றேன்.

ஆகவே இவர்கள் தற்போதுள்ள யதார்த்தத்தினை புரிந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான கட்சி என்பதை உணர்ந்து கொண்டு, அமைச்சுப் பதவிகளுக்கு சோரம் போகாது தற்போதுள்ள இரண்டும் கெட்டநிலையை கைவிட்டு முடிவொன்றை அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments