Header Ads

test

அபாய நிலையில் யாழ்ப்பாணம் - அச்சத்தில் மக்கள்.

 யாழில் தற்போது நிலவும் அபாயகர நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது அதனடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து செல்கின்றது. அந்த வகையில் தற்பொழுது 401 பேர் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

204 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடைய ஆயிரத்து 756 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் மிக அவதானமாக பொதுமக்கள் செயற்படவேண்டிய கால கட்டமாக இந்த காலப்பகுதி காணப்படுகின்றது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதோருக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களுக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்தும் பொதுமக்கள் சிலவேளைகளில் அலட்சியமாக செயற்பட்டதன் காரணமாக அதாவது விழாக்கள், ஆலய திருவிழாக்கள், போக்குவரத்து செயற்பாடுகளின் போது சுகாதார நடைமுறையினை பின்பற்றாததன் காரணமாகவும் இருக்கலாம்

அதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வாரங்களில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. அதனடிப்படையில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சில அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களில் 50 பேர் மட்டும் கலந்து கொள்ள முடியும். அதேபோல் மரண வீடுகளில் 25பேரும் சமூக கூட்டங்களில் 150 பேர் மாத்திரமே அனுமதிப்பது எனவும் திருமண நிகழ்வில் 150 பேராக மட்டுப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மற்றும் ஏனைய களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் விளையாட்டு நிகழ்வுகள் ஏனைய நிகழ்வுகளிற்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்னர் அப்பகுதி சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அதனை செயல்படுத்த முடியும்.

அத்தோடு அவர்களுடைய அறிவுறுத்தலின்படி குறித்த நிகழ்வுகளை செயற்படுத்த வேண்டும் அதே போல சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு பொலிசாரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி செயற்பாடுகள் மற்றும் ஏனைய வாழ்வாதார செயற்பாடுகள் யாழ் மாவட்டத்தில் வழமைபோல் இடம்பெற்றுவருகிறது.

குறித்த செயற்பாடுகளை தொடர்ச்சியாக மக்கள் இயல்பாக மேற்கொள்வதற்கு சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக பின்பற்றி தங்களுடைய குடும்பத்தையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் தற்போதைய காலப்பகுதி ஒரு அபாயகரமான காலப்பகுதி எனவே பொதுமக்கள் பீதி அடையாமல் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாதொற்று நிலைமையை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.



No comments