முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி - கசிந்தது உண்மை.
தான் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த போது சில முகவர்கள் எனது பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பெற்றுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே நான் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது எனவும் திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் பணமோசடி செய்ததாகவும், அதனால் கைது செய்யப்பட்டதாகவும் பல சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. நான் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்த போது எனது அலுவலகத்திற்கு பலர் பல தேவைகள் கருதி வருவது வழமை.
இதன்போது சில அரசாங்க அதிகாரிகளுக்கு அதனை சிபாரிசு செய்து அனுப்புவது வழமை. ஆனால் முகவர்களாக சிலர் செயற்பட்டு எனது பெயரைப் பயன்படுத்தி பணம் பெற்றுள்ளனர்.
எனது அவலுகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதால் நான் அதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியிருந்தது. இதனால் நீதிமன்றம் சென்று எனது தரப்பு நியாயங்களை நான் முன்வைத்துள்ளேன். அந்த பணம் எனது வங்கி இலக்கத்திற்கு வரவுமில்லை. நானும் கை நீட்டி வாங்கவும் இல்லை.
அரசியல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் இதனை வைத்து பல கட்டுக் கதைகளை கட்டுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment