Header Ads

test

வவுனியாவில் திருட்டுப்போன பல இலட்சம் ரூபாய்கள்.

 வவுனியா - இலுப்பையடிப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில்  இளைஞன் 

ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (02.04.2023) முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கையில் வவுனியா - நீலியாமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் வங்கியில் வைப்புச் செய்வதற்காகத் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக விற்பனை நிலைய உரிமையாளரால் கடந்த புதன்கிழமை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி கொழும்பு சென்றிருந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் சூட்சுமமான முறையில் வவுனியாவிற்கு வரவழைத்து வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த பணத்தில் 9 இலட்சம் ரூபாய் இளைஞனின் வங்கியில் உள்ளதாகவும், மிகுதி 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விட்டதாகவும் தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை வவுனியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


No comments