Header Ads

test

பொருளாதார நெருக்கடிக்குள்ளான குடும்பங்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

 அரசாங்கத்தின் சமூக நலன்புரி சபையின் மூலம் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான செயற்றிட்டத்திற்கு இதுவரை 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

இந்த விண்ணப்பங்களுள் உள்ளடக்கப்படாத மேலும் நிவாரணம் பெறுவதற்கு தகைமையுடையவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என சமூக நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் மிலான் ஜயதிலக்க எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் சிறந்த திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

எவ்வாறாயினும் பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ள பலரும் சமுர்த்தி கொடுப்பனவுகளை பெற்று வருவது தெரியவருகிறது. அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும் புதிய செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது முன்னர் நடைமுறையிலிருந்த பட்டியல் இரத்தாகும்.

அதேவேளை, நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளும் காத்திருப்பு பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் 18 இலட்சம் பேர் சமுர்த்தி உதவியைப் பெற்று வருகின்றனர். அதில் சிறப்பாக வேலை செய்யக் கூடியவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அவ்வாறானவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேவேளை, விசேட தேவையுடையவர்கள் கல்வி கற்பதற்கான பாடசாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு பல்கலைக்கழகம் வரை கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments