Header Ads

test

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடி துறைமுகம்.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று(28) நடைபெற்றுள்ளது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 மிக நீண்ட காலமாக தூர்ந்து போயுள்ள மீன்பிடி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு கடற்றொழிலாளர்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில் ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டிற்கு தேவையான அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

இந்த துறைமுகத்தின் நுழைவாயில் மண்ணால் மூடப்பட்டதையடுத்து அம்பாறை மாவட்ட ஆழ்கடல் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டதோடு அபிவிருத்திகளும் தடைப்பட்டிருந்தது.

மண்ணால் மூடப்பட்டுள்ள நுழைவாயிலிலுள்ள மண்ணை அகற்றி தற்போது ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 500ற்கு மேற்பட்ட ஆழ்கடல் கடற்றொழிலாளர்கள் நன்மையடையவுள்ளார்கள். மீன்பிடி துறைமுகம் 03 கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

முதற்கட்டமாக இந்த பிரதேசத்திலுள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக மீன் ரின் தொழிற்சாலை அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளது.

துறைமுக நிர்மாணிப்பினால் அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் கடற்றொழிலாளர்களும், பொதுமக்களும் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.

கடலரிப்பினை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை தென்கிழக்கு பல்கலைக்கழக துறைசாரந்த அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.




No comments