பரந்தனில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் சடலத்துடன் போராட்டம் நடாத்திய உறவுகள்.
பரந்தனில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி A – 09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த புத்தாண்டு தினத்தில் நால்வர் கொண்ட குழுவினரால் இளைஞர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கியும் குத்தியும் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தை அவதானித்த அவருடைய மருமகன் அதனை தடுத்து நிறுத்தச் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதேவேளை உயிரிழந்தவரின் உடலம் மருத்துவ பரிசோதனையின் பின்னர் குடும்பத்தாரிடம் இன்று கையளிக்கப்பட்டிருந்தது. சடலத்தை சுமந்துவந்த உறவினர்கள் பரந்தன் சந்தியில் A– 09 நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் பரந்தன் சந்திப் பகுதியில் பெரும் குழப்ப நிலை நீடித்ததுடன் மக்களின் போராட்டத்தால் A – 09 நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
Post a Comment