Header Ads

test

திருகோணமலை சிறுமி கடத்தல் தொடர்பில் பொலிசாரின் அசந்தபோக்கு - பெற்றோர் கடும் விசனம்.

 திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக மூதூர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 07.12.2021 அன்று இரவு அக்கிராமத்தைச் சேர்ந்த செல்வநாயகம் உதயன் வயது 24 என்பவரினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மூதூர் காவல் நிலையத்தில் 08.12.2021 அன்று சிறுமியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை தங்கள் பிள்ளை தொடர்பாக எவ்வித தகவல்களும் இல்லை எனவும் கடத்தப்பட்டுள்ள தங்களது பிள்ளையை கண்டுபிடித்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் மன்றாட்டமாக கேட்டுக் கொள்வதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

சிறுமி கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் சம்பந்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கே உரியது எனவும் அதனை விரைவுபடுத்துவதற்காக மாகாண சிறுவர் நன்நடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தினால் கிழக்கு மாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. 

சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமி கங்குவேலி அகத்தியர் வித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி கற்றுவரும் மாணவி எனவும் தெரிய வருகின்றது. இச்சிறுமியை கடத்தியதாக கூறப்படும் செல்வநாயகம் உதயன் என்பவர் கடந்த வருடம் 13 வயதான இன்னுமொரு சிறுமியை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இவ்வருடம் பெப்ரவரி மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் இன்னுமொரு சிறுமியை கடத்திச் சென்றிருப்பது கிராம மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இச்சிறுமி கடத்தப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் மூதூர் காவல்துறையினரால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.






No comments