Header Ads

test

இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

 இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுச் சவால்களை வெற்றிகொண்டு இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது தெளிவுபடுத்தினார்.

கொழும்பிலுள்ள இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இரவு கொழும்பு ஷங்கிரில்லா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பும் இரவு விருந்துபசாரமும் இடம்பெற்றது.

இதன்போது கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட துரித செயற்பாட்டிற்கு தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அத்துடன் இஸ்லாமிய நாடுகளுடனான இருதரப்பு உறவை தொடர்ந்து பேணுவதல், பரஸ்பர செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்புச் செய்வது தொடர்பிலும் தூதுவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் 15 தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஓமான், பலஸ்தீன், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, கடார், துருக்கி, ஈரான், லிபியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் மாலைதீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் இலங்கை உயர் ஸ்தானிகர்கள் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.


No comments