Header Ads

test

வவுனியாவில் அத்துமீறிய சிங்கள குடியேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள்.

 வவுனியாவில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நெடுங்கேணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அனுராதபுரம் வடக்கின் சில கிராமங்களை எல்லை நிர்ணயம் என்ற போர்வையில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முனைப்பை அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இன்று வவுனியா வடக்கு பிரதேச சபை மண்டபத்தில் கலந்து கொண்டு குறித்த விடயம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது என தீர்மானித்துள்ளனர்.

இதன் போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், எம். தியாகராசா, தமிழரசுக்கட்சியின் வவுனியா அமைப்பாளர் ந. கருணாநிதி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பில் ஜி. ரி. லிங்கநாதன், மாக்ஸிச லெனினிச கட்சி பிரமுகர் இ. பிரதீபன், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




No comments