சாணக்கியன் போலித் தேசியவாதி என இடித்துரைக்கும் பிள்ளையான்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Sanakkiyan) போலி தேசியவாதி என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (S.Chandrakanthan) சாடியுள்ளார்.
தனது அரசியல் இருப்புக்காகவே மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாகக் கூறி இரா.சாணக்கியன் போராட்டங்களில் ஈடுபடுவதாக மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் அவர் கூறினார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
சாணக்கியனின் ஊடகங்களைப் பார்த்தால் சிங்கள மக்களுக்கு மாத்திரம் அமைச்சர் காணி உறுதிப்பத்திரம் வழங்குவது போன்றும், அதற்கு நாங்களும் துணைபோகின்றோம் என்ற விதத்தில் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் தவகல்களை பிழையாக வழங்கி தவறாக வழிநடாத்தப் படுகின்றார்கள்.
எமது மாவட்டத்திலே, நாட்டிலே வாழ்கின்ற எல்லோருக்கும் காணி இருக்க வேண்டும். அனைவருக்கும் காணி வழங்க வேண்டும். மட்டக்களப்பிலே தேவநாயகம் ஐயாவின் காலத்தில் வலை வாடியில் சிங்கள மக்கள் இருந்தார்கள். ஏறாவூரிலே சிங்கள மக்கள் இருந்தார்கள், காணியைப் பற்றித் தெரிந்த நிர்வாகிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது தெரியும். அவர்கள் வரலாறு தெரியாமல் நடக்கமுடியாது.
சிங்களம், தமிழ், முஸ்லிம் யாராக இருந்தாலும் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்க வேண்டும், பிணக்குகள் வரும்போது அதனைத் தீர்த்துக் கொடுக்க வேண்டும். சமநிலையைக் குழப்புகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு நாங்கள் எதிராக இருப்போம்.
எனவே பொறுப்பான ஊடகங்கள் எல்லாவற்றுக்கும் இனவாதத்தைக் கக்குகின்றதுபோல் நடந்து கொள்ளக்கூடாது என அவர் தெரிவித்தார்.
Post a Comment