Header Ads

test

சங்குப்பிட்டி பாலத்தால் அச்சமின்றி பயணம் செய்ய முடியும் என வீதி அபிருத்தி அதிகார சபை தெரிவிப்பு.

 சங்குப்பிட்டி பாலத்தால் அச்சமின்றி பயணம் செய்ய முடியும் என வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப்பணிப்பாளர் T.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் மக்கள் சந்தேகிப்பது தொடர்பில் வெளியான செய்தியைத் தொடர்ந்து குறித்த பாலத்தை பார்வையிடச் சென்று இருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சங்குப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பாலம் ஆபத்தான நிலை நோக்கி செல்கின்றதா என மக்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தையும், கிளிநொச்சியையும் இணைக்கும் குறித்த பாலம் 16.01.2011 அன்று இன்றைய பிரதமரும் அப்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த பாலம் மன்னார் யாழ் வீதியில் அமைந்துள்ளது. பாரிய நிதி செலவில் நிர்மானிக்கப்பட்ட குறித்த பாலம் சேதமடைந்து வருவதை அவதானிக்க முடிந்தது.

பாலம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் கொங்கிரீட்டிலான பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பாலம் துருப்பிடித்து சிதைவுகள் ஏற்பட்டு வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது. குறித்த விடயம் தொடர்பில் கடந்த 29ம் திகதி செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் பணிப்பிற்கமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பார்வையிட்டதுடன், ஏற்பட்டுள்ள சிறிய பாதிப்புக்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப்பணிப்பாளர் T.வசந்தகுமார், வட மாகாண பணிப்பாளர் குருஸ், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் செயலாளர் சிவராம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதன்போது வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப்பணிப்பாளர் T.வசந்தகுமார் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.

குறித்த பாலத்தில் பயணிப்பது தொடர்பில் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. அதில் காணப்படும் சிறிய சேதங்களை பாதுகாக்கும் ஆரம்ப பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

இந்த பாலம் 120 ஆண்டுகால பாவனைக்கு ஏற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டது. தற்பொழுது சேதம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் பகுதிகள் உவர் காற்றினால் ஏற்பட்ட சிறிய பாதிப்புக்களே ஆகும்.

இது தொடர்பில் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. 2011ம் ஆண்டு திறக்கப்பட்ட குறித்த பாலத்தினை 2016ம் ஆண்டு திருத்தம் செய்தோம். 5 ஆண்டுகளிற்கு ஒருமுறை திருத்தங்களை செய்வோம்.

தற்பொழுது ஆரம்ப திருத்தல் பணிகளை செய்கின்றோம். தற்பொழுது உள்ள கொவிட் சூழல் காரணமாக முழுகையாக செய்ய முடியாதுள்ளது. அதற்கு தேர்ச்சி பெற்ற ஊழியர்களை அழைத்து வந்து திருத்தம் செய்ய வேண்டும்.

விரைவில் அந்த பணி முழுமை அடையும். எனவே, போக்குவரத்து செய்வதில் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. அங்கு பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி வீதி மின்விளக்குகளும் சீர் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


No comments