Header Ads

test

வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மாயம்.

 சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்ட தமிழ் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் காணாமல் போயுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகம போதனா வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வத்தளை − ஹுனுபிட்டி பகுதியைச் சேர்ந்த 71 வயதான அழகேசன் சிவகாமி என்ற பெண்ணின் சடலமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

குறித்த பெண் ராகம வைத்தியசாலையின் 30வது விடுதியில் கடந்த 12ம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்ப்பதற்காக 13ம் திகதி அவரது மகன் வைத்தியசாலைக்கு சென்ற வேளை, அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சடலத்தை பொறுப்பேற்பதற்காக அவரது மகன் சென்ற வேளையில், அவரிடம் பெண்ணொருவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த சடலம் தன்னுடைய தாயினுடையது அல்லவென கூறிய மகன், அந்த சடலத்தை பொறுப்பேற்க மறுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ராகம வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் ஆராய்ந்த போதிலும், குறித்த பெண்ணின் சடலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முயற்சித்த போதிலும், பொலிஸார் முறைப்பாட்டை பொறுப்பேற்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைத்தியசாலை நிர்வாகத்தினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


No comments