Header Ads

test

யாழ் மக்களுக்கு மாவட்ட செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை.

 யாழ்.மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டிருப்பதாகவும், இது ஆபத்தான நிலைய உருவாக்கும் எனவும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்டத்திலுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குடாநாட்டில் இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் திருவிழாக்கள் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாது மக்கள் செயல்படுகின்றார்கள்.

குறிப்பாக இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது. இது ஒரு அபாய நிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு விடயம் எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

நேற்றைய தினம் கரவெட்டிப் பகுதியில் இந்து ஆலய பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டவர்களில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல ஆலயங்களில் திருவிழாக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இடம்பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது .

இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒத்துழைத்தால் மாத்திரமே இந்த தொற்றில் இருந்து தப்பிக்க முடியும். சுகாதார பிரிவினரால் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் அந்த தளர்வினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எமது செயற்பாடுகளை செயற்படுத்த முடியும்.

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலைமையினை அனுசரித்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும் எனவும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.



No comments