Header Ads

test

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் யாழ் வருகை தந்த நாமல் வெளியிட்ட தகவல்.

காணாமல்போனோர் தொடர்பான விடயத்தை ஊடகங்களில் கருத்து தெரிவித்து, அரசியலாக்கக்கூடாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று பல ஆண்டுகள் ஆகின்றன. அதேபோன்று, 1988, 89 மற்றும் 83 முதலான காலப்பகுதிகளில் காணாமல்போனோர்கள் குறித்து, தெற்கிலும் தொடர்ந்து பேசப்படுகிறது.

இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மிகவும் உணர்வுபூர்வமான விடயம் இதுவாகும்.

எனவே, இது குறித்து ஊடகங்கள் மூலமாக கருத்து தெரிவித்து, இதனை அரசியலாக்காமல் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரச தரப்பும் இணைந்து கிரமமான தீர்வை இதற்கு காண வேண்டும் என்றார்.

இதேவேளை, தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மகனும், மகளும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments