Header Ads

test

குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்து மூலமாக அறிவித்துள்ளது.

 முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க சுவீகரிக்கும் நடவடிக்கையை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்து மூலமாக அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், 1932 ஆம் ஆண்டு உறுதியின்படி தொல்பொருள் என்ற பெயரிலான வரைபடம் ஒன்றின்படி- 78 ஏக்கர் காணி வழிபாட்டிடம் ஒன்றிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை மீள அளவீட்டிற்காக அறிவிக்கும்படி பிரதேச செயலாளரிடம் தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பிலிருந்து வருகைதந்த நில அளவையாளரால் கடந்த வருட இறுதி பகுதியில் இப்பிரதேசம் அளவீடு செய்யப்பட்டு குருந்தாவ விகாரை தொல்லியல் பிரதேசம் என குறிப்பிட்டு 78 ஏக்கர் வரைபடதில் உள்ளடக்கபட்டிருந்தது. இதன் தொடர்சியாக கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து தொல்லியல் ஆய்வு பணிகளை குருந்தூர் மலையில் ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில், குருந்தூர் மலையை சுற்றியுள்ள 400 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 400 ஏக்கரில், சுமார் 150 ஏக்கர் காணி, தண்ணி முறிப்பு கிராமத்திற்குரிய தமிழ் மக்களுடையதாகும். மிகுதி காணிகள் நாகஞ்சோலை வனப்பகுதியில் உள்ளடங்குகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் தமது காணிகளை சுத்தம் செய்து விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் நோக்கோடு தண்ணிமுறிப்பு கிராம மக்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் பௌத்த தேரர்கள் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையில் அவசர அவசரமாக இந்த காணிகளை கோரி பிரதேச செயலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலதிகமாக 400 ஏக்கர் காணிகளை கோரியுள்ளமை அந்த பகுதி முழுவதும் சிங்கள குடியேற்றங்களை நிறுவி சிங்கள மயப்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது என அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த காணியை தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறு வடமாகாண ஆளுநர் திணைக்களத்திலிருந்தும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளிற்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டும் வருகிறது.

எதிர்வரும் 1ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டத்தில், தொல்பொருள் திணைக்களம் 400 ஏக்கர் காணி கோரும் விடயம் ஆராயப்படவுள்ளது. அதன் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



No comments