Header Ads

test
அரசு வெளிவாரி பட்டதாரிகளுக்கு மிக விரைவில் நியமனங்களை வழங்க வேண்டும். டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்.!!!



கடந்த ஆட்சியின் போது வெளிவாரி உள்வாரி என என்ற வேறுபாடு இன்றி அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஆனால் இந்த அரசு வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணித்துள்ளது. இதற்கு வடமாகாணத்தை சேர்ந்த அரசுடன் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தமேதும் அரசுக்கு கொடுக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடமாகாணத்தில் மத்திய மற்றும் மாகாண அரச திணைக்களங்களில் தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

நான் அரசியல் அதிகாரத்தில் இருந்த காலத்தில் இவ்வாறான சந்தர்ப்பத்தை தென்னிலங்கை அரசுக்கு வழங்கியிருக்கவில்லை. ஆனால் வைத்தியர்கள் பொறியியலாளர்கள் இல்லாத பட்சத்தில் அதற்கான  நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தேன்.

வெளிவாரி உள்வாரி என்ற வேறுபாடு இன்றி பட்டதாரி பயிலுநர்கள் என்ற அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் பெருந்தொகையான பட்டதாரிகளை உள்வாங்கி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனங்களை வழங்கியிருந்தேன்.

எந்த சந்தர்ப்பத்திலும் வெளிவாரி பட்டதாரிகளை ஒதுக்கிவைக்க அரசுக்கு நான் இடங்கொடுக்கவில்லை. ஆனால் இன்று அரசுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிவாரிப் பட்டதாரிகள் விடயத்தில் எவ்வித கரிசனையும் கொள்ளாதது அலட்சியத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த அரசு வெளிவாரி பட்டதாரிகளுக்கு மிக விரைவில் நியமனங்களை வழங்க வேண்டும் என  நாடாளுமன்றிலும் நான் வலியுறுத்தியுள்ளேன்.

எனவே பாரபட்சமின்றி வெளிவாரி பட்டதரிகளுக்கு விரைவில் அரசாங்கம் நியமனம் வழங்கி அவர்களின் ஏக்கங்களை போக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.



No comments